நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள்!


நேற்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் அனைத்து கட்சிகளின் கடும் விவாதத்துக்கு பின்னர்
லோக்பால், லோக் ஆயுக்தா மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் லோக்பால் அமைப்புக்கு அரசியலைப்பு அந்தஸ்து தருவதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலைப்பு சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது.


நேற்று சுமார் 10 மணிநேர காரசாரமான விவாதத்தை அடுத்து, எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் மற்றும் திருத்தங்கள் சில மத்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதன் படி, லோக் ஆயுக்தா அமைப்பது கட்டாயம் என காணப்பட்ட விதிமுறை, மாநில அரசு விரும்பினால் லோக் ஆயுக்தா அமைக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இராணுவம், கடலோர காவற்படை, ஆகியவற்றை லோக்பால் வரம்பிலிருந்து நீக்குவதற்கும், பிரதமரை விசாரிக்க லோக்பால் உறுப்பினர்களில் நான்கில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் போதும் எனும் திருத்தத்திற்கும் சம்மதம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை லோக்பால் அமைப்புக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதா மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மக்களவை தலைவர் மீரா குமார் அறிவித்தார்.

இது மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடித்துவிட்டன. இது ஜனநாயகத்துக்கு மிக சோகமான நாளாகும். மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சிகளுக்கு தனது விசனத்தை தெரிவித்தார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

இந்நிலையில் லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐயை கொண்டுவந்தால், யாருக்கும் பதில் சொல்ல கடமைப்படாத வகையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு நிர்வாக அமைப்பு உருவாகியதாக ஆகிவிடும் என்பதால், லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ கொண்டுவரப்படமாட்டாது என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதேவேளை முல்லை பெரியாறு அணையில் ஏதும் பிரச்சினை திடீரென்று ஏற்பட்டால், அதை உடனடியாக சமாளிக்க மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையைத்தினால் குழு அமைத்து செயற்படும் திட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று இக்குழுவை வாபஸ் பெறுவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தினால் குழு அமைக்கப்பட்டுள்ளதால், மற்றுமொரு குழு தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டதற்கு இணங்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1