தானே புயலுக்கு 19 பேர் பலி

தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாக்கிய தானே புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் இன்று காலை கரையைக் கடந்தது. 

இந்த புயலால் ஏற்பட்ட பலத்த சூறாவளி,மழை மற்றும் வீடு இடிபாடுகளில் சிக்கி தமிழகத்தில் 12 பேரும், புதுச்சேரியில் 7 பேர் என இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். 


இதில் கடலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டைக்குப்பம் பகுதியில் மரம் பெயர்ந்து விழுந்ததில் பிரகாஷ் என்பவர் வீடு இடிந்தது.இதில் இடிபாடுகளில் சிக்கி பிரகாஷின் மனைவி சுகந்தி வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தார். 

சங்கராபுரம் ஆலந்தூரில் குருவப்ப நாயுடு என்ற முதியவர் இன்று அதிகாலை தெருவில் கிடந்த மின்கம்பியை மிதித்தார்.இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிணமானார். 

அதுபோல புதுச்சேரி உப்பளம் பிரான்சுவா தோட்டத்தில் ஒரு வீடு இடிந்தது. வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலருக்கு காயம் ஏற்பட்டது.


வானூரில் வீடு இடிந்து ஒருவர் பலியானார்;6 பேர் காயம் அடைந்தனர். 

ஆவடி பட்டாபிராமில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முன்னாள் இராணுவ வீரர் ஏசுதாஸ் (67) என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். 

தானே புயலினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உயிர்சேதம் மட்டுமல்லாது பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்புப்பணிப் படையைச் சேர்ந்த 15,000 வீரர்கள் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1